Sunday, October 9, 2011

முஸ்லிம்களும் ஊடகங்களும்

முஸ்லிம்களும் ஊடகங்களும் மாலிக் கான்

 
சமீபத்திய ஈராக் போரை எடுத்துக்கொள்வோம், ஈராக்கின் பெட்ரோல் வளத்திற்கு ஆசைப்பட்டது அமெரிக்கா. அதை அபகரிக்க ஈராக்கை பயங்கரவாத நாடு என்று தன் ஆதரவு செய்தி ஊடகங்களான பி.பி.ஸி மற்றும் சி.என்.என் வழியாக உலகநாடுகள் மத்தியில் சித்தரித்தது. அணுஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருக்கின்றதா? என ஐ.நா நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அவ்வாறு இல்லை என்று உறுதிபடக் கூறியது. எனினும் ஐ.நாவின் சொல்லையும் மீறி அமெரிக்கா தன் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி (Veto-Power) ஈராக் மீது போர் தொடுத்தது. அப்போது ஈராக்கை பலஹீனப்படுத்த முதன் முதலில் அமெரிக்கா தன் ஏவுகனைகளை ஈராக்கின் தகவல்தொடர்புக் கட்டிடத்தின் மீது வீசி அதை முற்றிலுமாக அழித்தது. காரணம், ஈராக்கினுள் தான் நடத்தப்போகும் அராஜக மனித மீறல்கள் உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்று மீடியாக்களின் வாசல்கள் அனைத்தையும் அடைத்தது.
குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அநியாயமான முறையில் தடாக் கைதிகளாகவும், பொடாக் கைதிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணை மரபு மீறலையும் தாண்டி மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்தனர். விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யப்பட்டனர். இச்செய்திகளை மீடியாக்கள் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்த போது உலகநாடுகள் குஜராத் சம்பவத்தை விமர்சித்தன. இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவு குஜராத் சம்பவம் என எல்லோரும் கூறினர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எந்த முகம் கொண்டு இனி நான் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வேன் என்று கூறினார். மீடியாவின் மூலமாக இச்சம்பவங்கள் வெளிவராமலிருப்பின் இன்னும் முஸ்லிம் சமுதாயம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
உலக அளவில் முஸ்லிகள் பொட்டுப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் வரலாறுகள், தியாகங்கள் எல்லாம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. பள்ளிகளில் பயில வரும் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் முஸ்லிம்கள் தீயவர்கள் என்ற நஞ்சை விதைக்கின்றனர். பாடதிட்டங்களில் தங்கள் மதக் கொள்கைகளைத் திணிக்கின்றனர். காவல் துறை, இராணுவம், அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றார்கள். மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில் வகுப்பு வெறி ஊடுறுவிவிட்டது. முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை மீடியாக்கள் மூலம் மக்கள் சக்தியை உருவாக்கி முஸ்லிம்கள்பால் சுமத்துகின்றன. நாம் மீடியாவில் அவசியத்தை உணராமலிருப்பதன் விளைவுதான் இத்தகைய தீய பலன்களை அடைய வேண்டியுள்ளது.
ஒவ்வொரு நவீனக் கண்டுபிடிப்புகள் வந்தபோதெல்லாம் அதைத் தீய வழியில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அஞ்சி முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்றளவும் டி.வி இல்லாத பல இஸ்லாமிய இல்லங்கள் இருக்கத்தான் செய்கின்றன. டி.வியை எவ்வாறெல்லாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை அறிய முற்படாமல் டி.வி பார்ப்பது ஹராம் என்ற மார்க்கத் தீர்ப்பையும் வழங்கினர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஹராம் என்றும் கூறினர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச்சிக்கும், மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று ஆமை வேகத்தில் அறிந்துகொண்டதன் பின்தான் ஆடியோ, வீடியோ, சி.டி, டி.வி.டி என பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
கல்வியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சிக்கு அடிகோலிடும்.
கல்வி கற்பதில் முஸ்லிம்கள் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டாத நிலை. மனித அறிவின் பிறப்பிடம் கல்வி என்பதை ஏனோ முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். எழுத்தறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் கற்றறிந்த மாற்றார்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஊடகங்களின் வாயிலாக நசுக்குகிறார்கள். ஊடகங்களை எதிர்கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்யவேண்டும். வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் ஆன்லைனில் கல்விகற்கும் நிலை நிலவிவருகின்ற சூழலில் முஸ்லிம்களுக்கு என்று எத்தனை கல்வி நிலையங்கள் இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் கல்விக்கூடங்களை நாம் வைத்திருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். பணம்படைத்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் அதற்கான வாய்புகளும் வசதிகளையும் ஏற்படுத்திட முன்வர வேண்டும். கற்றறிந்தவர்கள் அனைவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்.
இதழியல் மற்றும் மொழியியல் முன்னேற்றம்.
இதழியல்(Journalism) என்பது வாரஇதழ்கள், மாதஇதழ்கள், தினசரி செய்திப் பத்திரிக்கைகள் மற்றும் எழுத்து வடிவில் மக்களைச் சென்றடையும் அனைத்து ஊடகங்களும் இதில் அடங்கும். எந்த ஒரு உலகச் செய்தியை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனினும் மாற்றார்களிடத்தில் உள்ள ஊடகங்களைத்தானே அணுகவேண்டிய சூழல் நிலவிவருகிறது. உதாரணத்திற்கு தமிழில் முஸ்லிம்களால் நடத்தப்படும் தினசரிச் செய்தித்தாள் ஏதேனும் உண்டா? வேதனைக்குரிய விஷயம் முஸ்லிம்களில் திறமையான எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. பத்திரிக்கைத் துறையில் நமது சமுதாயம் முன்னேற்றம் காணவேண்டும். கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் அதைச் சீரிய முறையில் எடுத்துரைக்க மொழி என்ற ஊடகம் அவசியமாகிறது. எனவே மொழியை அதன் இலக்கிய, இலக்கண அறிவோடு அறிதல் வேண்டும். ஆங்கிலம் என்பது உலகில் அதிகமானோரால் பேசப்பட்டு வரும் மொழி, எனவே அவற்றையும் நாம் கற்றறிய வேண்டும்.
தனிநபர் பிரச்சாரங்கள் , மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள்.
இவையாவும் மக்களைச் சென்றடையும் ஊடகங்களே! இவற்றின் மூலமாகவும் மக்கள் சக்தியை உருவாக்கிட முடியும். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மட்டும் போதித்துச் சென்றுவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல் அவர்கள் வெள்ளிமேடைகளில் (குத்பாப் பேருரைகள்) பிரச்சாரங்கள் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம் நாடுகளில் பெருவாரியான முஸ்லிம்கள் ஒன்று குழுமக் கூடிய வெள்ளிக்கிழமை பேருரைகள் அரபி மொழியிலேயே சடங்குக்காக நடந்து வருகின்றன. நம்மில் பலரும் அதைப் பக்தியோடு கேட்டு துயில் கொண்டு செல்கிறோம். இன்றைய முஸ்லிம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது, சமுதாயத்தில் படர்ந்துவிட்ட களங்கங்கள் என்ன? மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டலாம் என உணர்ந்து இந்த குத்பாப் பேருரைகள் அமைந்தால் அதுவும் மீடியாவில் மகத்தான வெற்றிதான்.
பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
இணையம் ( Internet).
இணையம் என்பது உலகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இணைத்துவிடுகிறது. டாட்காம், வெப்காம், பிளாக், இ-மெயில், சாட்டிங், டேட்டிங், ஃபாரம், ஆன்லைன் என்று உலக மீடியாக்களில் இணையம் இமாலய முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றது. நம் சமுதாய மக்களோ இன்னும் கம்ப்யூட்டர் என்றால் என்ன? சாஃப்ட்வேர் என்றால் என்ன? ஹார்ட் வேர் என்றால் என்ன? என்று கணினி பற்றிய உபயோகம் குறித்து அறியாமலே இருக்கிறார்கள். கணிப்பொறி மற்றும் இணையத்தின் பயன்பாடுகளைக் கொண்டு முஸ்லிம்கள் ஊடகங்களை வலுவடையச் செய்யலாம். கணினி மற்றும் இணையத்தின் எல்லாப் பயன்பாடுகளும் தமிழிலேயே அறிந்துகொள்ள மென்பெருட்கள் வந்துவிட்டன. கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் என்ற ஊடகங்களின் பயன்பாடுகள் அறிந்து முஸ்லிம்கள் இவ்வாறான மீடியாக்களைப் பயன்படுத்த முன்வருதல் வேண்டும்.
ஒற்றுமை என்ற பண்பு மீடியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முஸ்லிம்கள் மீடியாவில் தாக்குப்பிடித்து மேற்கண்ட வழிகளில் முன்னேற ஒற்றுமை என்ற பண்பை முன்நிறுத்தியாக வேண்டும். உலக அளவில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒருமித்த கருத்தில் இருந்தால் அமெரிக்காவை எதிர்கொள்ள முடியாதா? ஊரளவில் முஸ்லிம்கள் ஜமாஅத்களாகவும், அமைப்புகளாகவும் பிரியாமல் ஒன்றுபட்டால் பெரிய மக்கள் சக்தியை உருவாக்க முடியாதா? கண்டிப்பாக முடியும். அப்போதுதான் மீடியாவின் மூலமாக சிறந்த செயல் திட்டங்கள் உருவாக்கமுடியும். பொருளாதாரத்தைச் சரிகட்டி நடைமுறைப்படுத்தவும் முடியும். இதை முஸ்லிம் சமுதாய மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes