Wednesday, October 12, 2011

2-நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காமுகராக சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.
இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் ஆதாரமில்லாமல் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது பற்றிய முழு விபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
உக்கால் எனும் அரபிய சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வளர்ந்து வந்தார்.

கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணந்த பின் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம், நீங்கள் விரும்பினால் விடுதலை செய்து விடலாம் என்று கூறி விட்டார்கள்.
அதன் பின் அவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணியாளராக இருக்கலானார். இந்நிலையில் தன் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸாவும், அவரது சகோதரர் கஃப் என்பவரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும் அதற்குரிய விலையைத் தந்து விடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் உங்களுடன் வருவதற்கு ஸைத் ஒத்துக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச் செல்லலாம்; எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தரவேண்டியது இல்லை. அவர் உங்களுடன் வர விரும்பா விட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது என்று கூறி விட்டனர்.
வந்தவர்கள், ஸைத் அவர்களிடம் பேசிப் பார்த்தனர். முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது என்று ஸைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஸைத் இனி மேல் என் மகனாவார். அவர் இனி மேல் அடிமையில்லை; நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார், எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஸைத்துக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்ச்சியுடன் பிரிந்து சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை (அல் இஸாபா)
அன்றிலிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை ஸைத் இப்னு முஹம்மத் (முஹம்மதுவின் மகன் ஸைத்) என்றே ஸைத் குறிப்பிடப்பட்டார்.
அவர்களின் தந்தையர் பெயராலேயே குறப்பிடுங்கள் (33:5) என்ற வசனம் அருளப்படும் வரை முஹம்மதின் மகன் ஸைத் என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம் என்று இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் (4782) காணப்படுகிறது.
சொந்த மகன் போலவே ஸைத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் நபியவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே சார்ந்திருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்திடவே இந்த விபரங்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரியான உமைமா என்பவரின் மகள் ஸைனப் அவர்களை - அதாவது தமது மாமி மகளை - ஸைத்துக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணாகிய தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத் திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அபைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத புரட்சியாகும்.
ஜஹ்ஷ் உடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைத்துக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தினாலோ ஓராண்டுக்கு மேல் நிலைக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஸைனபை தலாக் கூறும் நிலைக்கு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகிறது.
யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. (திருக்குர்ஆன் 33:37)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக இவ்வசனம் கூறுகிறது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வளர்ப்பு மகனை, மகன் எனக் கருதி மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கு உண்டு என அன்றைய சமுதாயம் நம்பி வந்தது.
வளர்க்கப்பட்டவர், தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது இத்திருமணத்திற்குரிய காரணம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ஆசைப்பட்டு, ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஸைனப் மீது நபிகள் நாயகத்திற்கு ஆசை இருந்தால் அவர்கள் கன்னிப் பருவத்திலேயே ஸைனபைத் திருமணம் செய்திருக்க முடியும். அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஸைதுக்கே மணமுடித்துத் தருகிறார்கள்.
எனவே இறைவனின் நாட்டப்படியே இத்திருமணம் நடந்தது. இளமையோடு இருக்கும் போது அவரை மணந்து கொள்ளாமல், பல வருடங்கள் ஸைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.
ஸைத் ரளியல்லாஹு அன்ஹு தம் மனைவி ஸைனபை தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவர் ஆலோசனை செய்ததும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலாக் கூற வேண்டாம் என்று அவருக்குப் போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.
இதே வசனத்தில் இறுதிப் பகுதியில் அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்துக் கொண்டீர் மக்களுக்கு அஞ்சினீர் என்று இறைவன் கடிந்துரைக்கிறான்.
தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட விஷயம் என்ன என்பது இவ்வசனத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற சில அறிவிலிகள் எவ்வித ஆதாரமும் இன்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
ஸைத் வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்க்கக் கூடாத கோலத்தில் ஸைனபைப் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகைக் கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதிற்குள் எண்ணினார்களாம். ஸைத் தலாக் கூற முன் வந்ததும் தலாக் கூற வேண்டாம் என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் அவர் தலாக் கூற வேண்டும்; அதன் பிறகு அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத் தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறானாம். இப்படிப் போகிறது கதை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படியொரு சம்பவம் நடந்ததாக ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் கிடையாது.
ஒரு ஆதாரமும் இன்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி இவர்கள் அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடந்த கால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையைப் புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நபியவர்கள் தம் மனதில் உள்ளதை மறைத்துக் கொண்டதாகக் கூறப்படுவதன் விளக்கம் என்ன என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.
ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்த போது ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வயது 34 அல்லது 35 ஆக இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து நாம் இப்படி முடிவு செய்ய இயலும்.
அது வருமாறு:
ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் ஓர் ஆண்டு அல்லது அதை விட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்று விபரம் கிடைக்கின்றது. (பார்க்க : இப்னு கதீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வயது முப்பத்தி ஐந்து. (பார்க்க : அல் இஸாபா)
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் 35 வயதில் இருந்து ஸைதுடன் வாழ்ந்த ஓர் ஆண்டைக் கழித்தால் ஸைதுடன் திருமணம் நடந்த போது ஸைனபின் வயது 34 ஆகத் தான் இருக்க முடியும். ஏனெனில் ஸைத் தலாக் கூறி இத்தா முடிந்ததும் உடனேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைனபை திருமணம் செய்ததாக அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்குச் சிரமமானது. சாத்தியக் குறைவானது. ஸைதை மனப்பதற்கு முன் அவர்கள் வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும்.அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமல் இருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாக இருந்தாலும் ஸைதைத் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 35 என்பது அதை விடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது 56 வயதில் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனபுடைய வயது 35 என்றால் 21 வயது வித்தியாசம் வருகிறது. அதனடிப்படையில் ஸைனப் அவர்களுக்கு 15 வயதாக இருக்கும் போது நபியவர்களின் வயது 36 ஆக இருக்கும்.
தன்னுடைய 36 ஆம் வயதில் ஸைனபைத் திருமணம் செய்ய வாய்ப்பு இருந்தும் நபியவர்கள் அப்போது திருமணம் செய்யாமல் இன்னொருவருக்கு வாழ்க்கைப்பட்டு திருமணம் ரத்தாகி இருக்கும் போது தான் திருமணம் செய்வார்களா?
பருவ வயதிலிருந்த ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது.
அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வாய்த்திருந்தது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது 53 வது வயது வரை ஸைனபைப் பார்த்து இருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக் கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்து, பேசி, பழகியிருக்கிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸைனபின் அழகில் சொக்கி விடாத நபியவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவருடைய பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐம்பது வயது வரை அவர்களுக்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மணைவியாக இருந்தார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மரணத்துக்குப் பின்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மணைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது.
ஸைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை அவர்கள் மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே?
இன்னும் சொல்வதென்லால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தாவை விட, ஆயிஷாவை விட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குழந்தைகளைக் கவணித்துக் கொள்ள இவர்களுக்கல்லவா அதிக அக்கரை இருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்கு மட்டும் தான் இருந்தது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் செய்ய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம்; அதன் காரணமாக அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கருத முடியாது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மணமுடித்துக் கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள். அவர் முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முதலில் மறுத்து விடுகிறார்கள். உடன் பின்வருமாறு இறை வசனம் இறங்கியது.
அல்லாஹ்வும்,அவனது தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால் முஃமினான எந்த ஆனுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுயவிருப்பம் கொள்ள உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார் (அல்குர்ஆன் 33:36) இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு எனும் நபித் தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கதீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்து கொள்ள ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விரும்பவில்லை என்பதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வற்புறுத்தலுக்காகவே தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன்வருகின்றார்கள் என்பதும் தெளிவாகிறது. நபியவர்களின் வற்புறுத்தலுக்காகவே தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஸைனப் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க மாட்டார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போதும் அந்தக் கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஸைனபைத் தகாத நிலையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்து விட்டு அவர் மீது ஆசைப்பட்டார்கள் என்றால் அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர் (அவர்களில் யாரும் அறியாவிட்டால் இதை எழுதி வைத்த நூல் ஆசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
இந்தச் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி தம் மணைவியை தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே ஸைத் ஆலோசனை கேட்கிறார்கள்.
அதன் பின்பும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அன்புடனும் அளவு கடந்த பாசத்துடனும் முன்னர் இருந்தது போலவே இதன் பின்னரும் நடக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்தக் கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மூத்தா எனும் போர் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 61 வது வயதில் நடந்தது. அதாவது ஸைனபை மணந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இந்தப் போரில் ஸைத் அவர்கள் தளபதியாகச் சென்று வீர மரணம் அடைந்தார்கள். (பார்க்க புகாரி 1246, 2798, 3063, 3757, 4262)
ஸைதுடைய மனைவியின் மீது ஆசைப்பட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் தட்டிப் பறித்து மணந்து கொண்டிருந்தால் அதன் பாதிப்பு ஸைதுக்குத் தான் இருந்திருக்கும். அதன் பின்னர் அவர் நபிகள் நாயகத்தின் எதிரியாக மாறி இருப்பார்.
ஆனால் அவ்வாறு ஆகாமல் நபிகள் நாயகத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்து பல்வேறு போர்க்களங்களில் பங்கு கொண்டு கடைசியாக மூத்தா போரில் உயிர் தியாகமும் செய்தார்.
இதில் இருந்து தெரிய வருவது என்ன? ஸைதுக்கும் ஸைனபுக்கும் இடையே ஒத்துப் போகாமல் மனமுறிவு ஏற்பட்டுத் தான் விவாக ரத்து நடந்திருக்கிறது. அவர் தனக்குப் பிடிக்காத மனைவியை விவாக ரத்துச் செய்த பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்து வாழ்வு கொடுத்தார்கள் என்பதால் தான் இது ஸைதைக் கடுகளவும் பாதிக்கவில்லை. நபிகள் நாயகத்தின் கட்டளையை ஏற்று உயிரைக் கொடுக்கவும் அவர் தயாராகிறார்.
இப்போரில் முதலில் தளபதி ஸைத் கொல்லப்படுவார். அதன் பின்னர் தன் பெரிய தந்தையின் மகன் ஜாஃபர் ரளியல்லாஹு அன்ஹு கொல்லப்படுவார். பின்னர் காலித் பின் வலீத் தலமையேற்று வெற்றிக் கொடி நாட்டுவார் என்று முன்னரே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி அனுப்புகிறார்கள். இப்போரில், தான் கொல்லப்படுவோம் என்பதைத் தெரிந்து கொண்டே தான் ஸைத் அவர்கள் படை நடத்திச் சென்றார்கள். இதில் இருந்து ஸைனப் விஷயமாக ஸைத்துக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை என்பது தெளிவாகிறது.
அது மட்டுமின்றி இன்னொருவர் மனைவியைப் பார்க்க்க் கூடாத கோலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்து அவரைத் திருமணம் செய்தார்கள் என்றால் அது அந்தக் காலத்து மக்களுக்குத் தான் தெரிந்திருக்கும். அவர்களை இறைத் தூதர் என்று நம்பிய மக்கள் அவர்களை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு காரணம் கூறி ஒரே ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை என்பதில் இருந்தும் இது ஜோடிக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை அறியாலாம்.
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொள்கை ரீதியாகப் பல எதிரிகள் இருந்தனர். இது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அதை அவர்கள் விமர்சிக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் எதிரிகள் கூட இது போன்ற விமர்சனத்தைச் செய்ததில்லை. இதில் இருந்தும் பிற்காலத்தில் இது புணையப்பட்ட கற்பனை என்பதை அறியலாம்.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின் மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்! மனிதர்களுக்கு அஞ்சினீர்! என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடுவது எதை? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உண்மையே. அது என்ன என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படி கதை கட்டி விட்டு, விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர்.
கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதைத் தீர்மானிப்பதை விட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த வாழ்வையும் இது போன்ற கட்டங்களில் மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது என்பது நமக்கே தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.
ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஸைனபைத் திருமணம் செய்வதற்கு முன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பாலூட்டிய உம்மு ஐமன் என்ற பெண்ணை ஸைத் ரளியல்லாஹு அன்ஹு திருமணம் செய்திருந்தார். இவ்விருவருக்கும் உஸாமா என்ற மகன் பிறந்தார். ஸைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் நேசித்தார்கள்.
அதன் பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்தார்கள்.
ஸைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்மு குல்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்மு குஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு.
அதன் பின் அபூ லஹப் உடைய மகள் துர்ரா என்பவரைத் திருமணம் செய்தார். (அல் இஸாபா)
இந்த விபரங்களை இங்கே கூறுவதற்குக் காரணம் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முன்கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மணைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்ததும் ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன்கோபத்தை எடுத்துக் காட்டுகிறது.
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களோ ஆரம்பத்திலிருந்தே ஸைதை விரும்பவில்லை. அவ்விருவருக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுவாபமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப் போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சன்டையும், சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போன்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார்.
ஆனாலும் மனைவியை தலாக் விடுவதாக ஸைத் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். தலாக் விடுவதாக ஒருவர் கூறியவுடன் அதை ஆதரிக்கிறாரே என மக்கள் எண்ணுவார்களே என்று அஞ்சுகிறார்கள். இது தான் உண்மையில் நடந்திருக்க முடியும் இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.
உம் மனைவியைத் தலாக் கூறாது தடுத்துக் கொள் என்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர் மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் அஞ்சுவதற்கு மிகவும் அருகதையானவன் (33:37)
தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதைக் கூறத் துணிவதில்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர் அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயால் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் இப்படி இந்த விஷயத்தில் மட்டும் நடிக்கத் தான் செய்வார்கள். அனுபவப் பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.
இந்த இடத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சராசரி மனிதனுக்கு ஏற்படக் கூடிய இது போன்ற எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர அடுத்தவர் மனைவியை ஆசைப்படக் கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்ப்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும் இந்தப் பொய்ச் செய்தியை முற்றாக நிராகரித்து விடுகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விவாக ரத்துச் செய்யாதே என்று ஆலோசனை கூறிய பிறகும் ஸைத் தம் மனைவியை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்து அதைச் செயல்படுத்தி விட்டார்.
இந்த நிலையில் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தானே மனைவியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதன் காரணத்தையும் அவனே கூறுகிறான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த பகுதியில் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. அறவே சந்ததி அற்றவர்களும், ஆண் சந்ததி அற்றவர்களும், உதவாக்கரை ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக் கொள்வர். வளர்ப்பு மகன் என்று பிரகடனம் செய்யப்பட்டவர் பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக்க் கருதப்படுவார்.
இப்படி வளர்த்தவர் இறந்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்குக் கிடைப்பதைப் போன்ற அதே சொத்துரிமை கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக தன்னை வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பதும் நடைமுறையில் இருந்து வந்தது. தந்தை,மகன் எனும் உறவு அவ்விருவருக்கும் இடையே உண்மையிலேயே ஏற்பட்டு விட்டதாக அவர்கள் நம்பினர்.
இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின் அல்லது அவன் இறந்த பின் அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்வது கூடாத ஒன்றாக்க் கருதப்பட்டு வந்தது.
ஏனெனில் அப்பெண் உண்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பினர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவராகி விட்டனர் என்பதும் இவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள்தனமான இந்தச் சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். தெளிவான தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையிலும் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது.
இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக் கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்த்து எறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஸைதுடைய மனைவியை, ஸைது விவாகரத்து செய்த பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவனே மனமுடித்து வைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது.
இந்தப் போலித்தனமான உறவுகள் தகர்க்கப்பட வேண்டியவை தாம் என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.
முதல் காரணம்.

தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கை அற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையால் தீர்மானிக்கப்படுபவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இ;யலாது. இவர் தான் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டும் என்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும்; எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக் கூடியதாகும் (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக் கூடியதாகும்)
ஆனால் தத்தெடுக்கும் போலித்தனமான உறவு முறைகள் செயற்கையை இயற்கையைப் போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.
இரண்டாவது காரணம்.
யாருடைய உயிரனுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்து விட்டு ஒரு சம்பந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்பந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், பெற்ற பிள்ளையை உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதை விட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளர வேண்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும் அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாக இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி யாராவது செல்வந்தர்கள் தத்து எடுக்க மாட்டார்களா? என்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடம் மேலோங்கி விடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.
மூன்றாவது காரணம்.
எவ்வளவு தான் பாசத்தைப் பொழிந்து ஒருவனைத் தத்து எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல் வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசத்தைப் பொழிய முடியாது. வசதியான இடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அவரைத் தந்தையாக ஏற்க்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?

வளர்ப்புத் தந்தைக்குப் பின் அவரது வாரிசாகப் போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன் அவர் சீக்கிரமாக சாக மாட்டாரோ என்று எதிர்பார்ப்பான் சீக்கிரத்தில் சாக மாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூருக்கு அனுப்பவும் தயங்க மாட்டான். இரத்த சம்பந்தம் இல்லாததாலும் இதயப் பூர்வமாக நேசம் இல்லாத காரணத்தினாலும் சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்வைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவிகாரப் புத்திரனிடம் பெரும்பாலும் எதிர்பார்க்க முடியும்.
நான்காவது காரணம்.
ஒருவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும் அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனுடைய பெற்ற மகனே அடைவான்.

பெற்ற மகனுக்கு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும் போது அவனுடைய தந்தையின் அண்ணன், தம்பிகளோ, அக்கா, தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கெல்லாம் கிடைக்காமல் இவனுக்குக் கிடைத்து விட்டதே என்று எண்ண மாட்டார்கள். ஏனெனில் மகன் என்ற உறவு மற்ற உறவுகளை விட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் யாருக்கோ பிறந்தவன் திடீரென நுழைந்து மகனென்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது, வசதிகளை அனுபவிக்கும் போது, இரத்த சம்பந்தம் உடைய அவனுடைய அண்ணன், தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்தப் போலி மகனை விட உண்மையான சகோதர, சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?
ஐந்தாவது காரணம்.
மேற்கூறிய அதே காரணத்தினால் எப்போது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கிறானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகைக்கும் நிpலை உருவாகும். உறவினர்களைப் பகைத்துக் கொள்ள இந்த சுவீகாரம் முக்கிய காரணமாக அமைகிறது. ஒரு போலித்தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.
ஆறாவது காரணம்.
தன் தந்தை அல்லாதவர்களை தந்தை என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை இப்றாஹீமுக்குப் பிறந்தவன் என்று சொல்லிப் பாருங்கள். அதன் பின் அதன் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவது தான் மனிதனின் இயல்பு.

எவனோ ஒருவனை தந்தை என்று அதுவும் உண்மையான தந்தை போன்று கருதுவதை விட மானம் கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப் படுத்தி விடுகின்றன.
இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்தப் போலித்தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாக சொல்லிக் காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.
யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. (திருக்குர்ஆன் 33:37)
எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். (திருக்குர்ஆன் 33:4)
அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 33:5)
உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 58:2)
உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:23)
இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைனபை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
அந்த உறவுகள் தகர்க்கப்படத் தான் வேண்டும் ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெரும் ஆணையிட்டால், அல்லது அதற்கு அனுமதியுண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.
மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோன்றினாலும் சிந்திக்கும் போது இது தவறு என்பது தெளிவாகும்.
திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பால்பட்டது. அனுமதிக்கத் தான் முடியும். மணம் செய்ய அனுமதியுண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வர மாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை.
காலம் காலமாக மகனுடைய மனைவி என்று நம்பி வந்திருக்கும் போது சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்களின் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தை தலைமுறை,தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள்.சமுதாயம் பரிகசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.
உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல் பாரம்பர்யப் பழக்கத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தகுதியானவர்கள் என்று கருதிய இறைவன் இதற்கு அவர்களையே தேர்வு செய்தார்ன்.
இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாகச் சொல்கிறான்.
இறைத்தூதர்கள் இறைவனிடம் செய்திகளை எடுத்துச் சொல்ல வேண்டும், அவனுக்கு அஞ்ச வேண்டும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது. (திருக்குர்ஆன் 33:39)
எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து அஞ்சுவதற்குரிய ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.
இதுவரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆறு திருமணங்களையும், அவற்றுக்கு காம வெறி காரணம் அல்ல என்பதையும் கண்டோம்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes