Wednesday, October 12, 2011

3-நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்


o உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்

o ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
o உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
o ஸஃபிய்யா பின்து ஹுயய் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
o மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார். இவர் இஸ்லாத்தை ஏற்றவர்களில் 11வது நபராகத் திகழ்ந்தார்.
எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற போது அவர்களில் இவரும் இவரது மனைவி உம்மு ஸலமா என்ற ஹிந்த் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அடங்குவர்.
திரும்பவும் மதீனாவுக்கு நபித்தோழர்கள் ஹிஜ்ரத் செய்து சென்ற போது இந்தத் தம்பதியினரும் அவர்களில் இருந்தனர். அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ருப் போரிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். உஹதுப் போரிலும் கலந்து கொண்டு படுகாயம் உற்றவர்களில் இவரும் ஒருவராவார். அதன் பின் ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் பனூ அஸத் என்ற கூட்டத்தினருடன் நடந்த சிரிய போரில் பங்கெடுத்து மீண்டும் படுகாயமுற்று மதீனா திரும்பினார்.அந்தக் காயங்களின் காரணமாகவே மரணத்தைத் தழுவினார்.
இவர் மரணிக்கும் போது இவரது மணைவி உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பாரா, ஸலமா, உம்ரா, தர்ரா ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களையே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்கள்.
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை வயது என்ற தெளிவான குறிப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது உண்மை.
ஏனெனில் நபியவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக்க் கூறிய போது நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை; என்னால் இனிமேல் குழந்தை பெறவும் இயலாது.என்று பதிலலித்தார்கள். (முஸ்னத் அஹ்மத் 15751)
உம்மு ஸலமா அவர்களே தாம் வயது முதிர்ந்தவராக இருப்பதையும், குழந்தை பெறும் பருவத்தைக் கடந்து விட்டதையும், தம் வயதுப் பெண்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை என்பதையும் காரணம் காட்டி திருமணத்திற்கு தயக்கம் தெரிவிக்கிறார்கள். இல்லற வாழ்வுக்குரிய தகுதியை இழந்து விட்ட இவர்களைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களுக்கு காமமே காரணம் என்றிருந்தால் கண்ணியர் பலரும் அவர்களைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்த சமயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்க பலரும் தயாராக இருந்த நிலையில் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாத முதிய வயதுப் பெண்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்களா? நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை காம உணர்வு மேலோங்கியவர் தேர்வு செய்ய முடியுமா?
இந்தத் திருமணத்துக்கும் காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணைவியரின் வயதை கவனித்துக் கொள்வதுடன் ஒவ்வொரு திருமணத்தின் போதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது என்ன என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இளமை வேகத்துடன் இருக்கும் காலங்களில் எல்லாம் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்ட நபியவர்கள் தமது ஐம்பத்தியாறு வயதுக்குப் பிறகு தான் பல திருமணங்களைச் செய்யலானார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தத் திருமணம் நடந்த போது அவர்களின் வயது ஐம்பத்தி ஏழாகும். இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை அண்ணியப் பெண்களை ஏறெடுத்தும் பாராமல் முதிய விதவையுடன் மட்டுமே வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நபியவர்களுக்கு ஐம்பத்தி ஏழாவது வயதில் காம உணர்வு மேலோங்கியது என்று சொன்னால் அறிவுடைய எவறாவது ஏற்க இயலுமா?
அப்படியே ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொண்டாலும் நான்கு குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற இல்வாழ்வில் நாட்டம் இல்லை என்று தாமே ஒப்புக் கொண்டுவிட்ட முதிய விதவையைத் தேர்ந்தெடுப்பார்களா? குழந்தை பெருவதற்குரிய வயதையெல்லாம் கடந்து அதாவது மாதவிடாய் நின்று விட்ட ஒரு பெண்ணைத் தான் காம உணர்வு காரணமாக திருமணம் செய்பவர் தேர்ந்தெடுப்பாரா? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.
அடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எட்டாவது திருமணத்தைக் காண்போம்.

ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் நபியவர்கள் போரிட்டனர்.
இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் உயிருடன் பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவரின் மனைவியும் அந்தக் கூட்டத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராவார். அன்றைய போர் தர்மத்தின்படி பிடிக்கப்பட்ட கைதிகள் போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் பட்டனர். ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸாபித் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.
இதன் பின்னர் ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நான் பனூ முஸ்தலக் கூட்டத் தலைவன் ஹாரிஸ் என்பவரின் புதல்வியாவேன். ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை அவர் ஏழு ஊக்கிய்யா வெள்ளி நாணயம் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று கூறுகிறார். எனவே என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.
நான் அந்தத் தொகையைத் தந்து விடுதலை செய்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்ததும், அவர் அதற்குச் சம்மதித்தார் இதன் பின் அவரை நபியவர்கள் மணந்து கொண்டார்கள்.
இந்தத் திருமணத்தின் போது நபியவர்களின் வயது ஐம்பத்தி ஒன்பதாகும். கைதிகளாகப் பிடிபட்டவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணின் அழகில் மயங்கி காம உணர்வின் காரணமாக அவரை அனுபவிக்க விரும்பியிருந்தால் தம் பங்குக்கு ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை எடுத்துக் கொண்டிருக்கலாம். நபித் தோழர்களில் எவரும் அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். ஆனால் அப்பெண்னை ஸாபித் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு என்பவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள். இதன் மூலம் காம உணர்வோ,உணர்ச்சியோ,கவர்ச்சியோ இத்திருமணத்திற்குக் காரணம் அல்ல என்பதை அறியலாம்.
தான் இந்தக் கூட்டத்தின் தலைவி என்று கூறிய பிறகு – தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிறகு - தான் அவரைத் திருமணம் செய்கிறார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெண்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணை மணந்து கொண்டதை அறிந்த நபித்தோழர்கள் அணைவரும் தங்களுக்குக் கிடைத்த அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். நபியவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட ஒரு கூட்டத்தினரை எப்படி அடிமைகளாக வைத்துக் கொள்வது என்ற எண்ணத்திலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்திருமணத்தின் போது ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வயது என்னவென்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும் அவர்களும் முதுமையான வயதுடையவர்களாகத் தான் இருந்திருக்கக் கூடும் என்று அனுமானம் செய்ய இடமுண்டு.
ஸாபித் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு என்பவருக்கு அப்பெண் கிடைத்ததும் இளமங்கையாகவோ, அல்லது சுண்டி இழுக்கும் பேரழகு கொண்டவராகவோ இருந்திருந்தால் இளைஞரான ஸாபித் இப்னு கைஸ் அவர்கள் ஏழு ஊக்கியா தந்துவிட்டு விடுதலையாகலாம் எனக் கூறியிருக்க மாட்டார். அவர் தாமே அனுபவிக்க எண்ணியிருப்பார். அடிமைகளை அனுபவித்துக் கொள்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் எந்தத் தடையும் இருக்கவில்லை. அல்லது அவரே கூட அப்பெண்னைத் திருமணம் செய்திருக்கலாம்.
தமக்குக் கிடைத்த பெண்ணை ஏழு ஊக்கியா தந்து விட்டு விடுதலையாகலாம் என்று அவர் கூறியதிலிருந்து ஜுவைரிய்யா அவர்கள் இளமங்கை ஆகவோ பேரழகு படைத்தவராகவோ இருந்திருக்க முடியாது என்பது தெளிவு.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் 59 வயதுடைய முதியவராகி விட்டார்கள். அந்தப் பெண்னும் அதே நிலையில் இருக்கின்றார். இவ்விருவருக்கும் நடந்த இத்திருமணத்திற்குக் காம உணர்வைக் காரணமாகக் கூற முடியுமா?
இத்திருமணத்தின் மூலம் அந்தக் கூட்டத்தின் தலைவியை மணமுடித்ததன் மூலம் அக்கூட்டத்தினர் முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதே இத்திருமணத்திற்குரிய தனிப்பட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
(ஏன் பல திருமணங்கள் செய்தார்கள் என்று இறுதியில் நாம் கூறக் கூடிய பொதுவான காரணங்களும் இத்திருமணத்திற்குப் பொருந்தும்) எனவே இத்திருமணத்திற்கும் காம உணர்வைக் காரணமாக கூற இடமில்லை.

உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தார்கள் இத்திருமணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒன்பதாவது திருமணமாகும். உம்மு ஹபீபா அவர்களின் இயற் பெயர் ரம்ழா என்பதாகும் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வந்தவரும், அபூ ஜஹ்ல் பத்ருப் போரில் கொல்லப்பட்ட பின் காஃபிர்களின் தலைவராகத் திகழ்ந்தவருமான அபூ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளே உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரியுமாவார்.
இவரது தந்தை இஸ்லாத்தை ஒழித்திட தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலத்திலேயே உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவரும் அப்போதே இஸ்லாத்தைத் தழுவினார்.
தந்தையின் கொடுமை தாள முடியாத அளவுக்குச் சென்ற போது ஹபஷா (அபீஸீனியா) வுக்கு தம் கணவருடன் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) செய்தார்கள். அபீஸீனியா சென்றதும் சிறிது காலத்தில் இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிருத்தவராக மதம் மாறினார். கணவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பின்னரும் கூட இவர்கள் இஸ்லாத்தில் உறுதியாக நின்றார்கள்.
சரித்திரத்தில் இத்தனை கொள்கைப் பிடிப்புள்ள பெண்களை அரிதாகவே காண முடியும். தந்தையை விடவும் கணவரை விடவும் கொண்ட கொள்கையே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் உம்மு ஹபீபா (ஹபீபாவின் தாய்) என்றும் அழைக்கப்பட்டார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக ஆவதற்கு 17ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பிறந்தார்கள். (அல் இஸாபா) இவர்களை நபிகள் நயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது 59ம் வயதில் திருமணம் செய்த போது இவர்களுக்கு 37 வயதாக இருந்தது.
கணவர் மதம் மாறியதால் அயல் நாட்டில் இவர்கள் நிர்க்கதியாக கணவரைப் பிரிந்து கொள்கைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது தான், இதனைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாமே உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
அபீஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அவரது நாட்டில் நிர்க்கதியாக இருந்த உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை தாம் திருமணம் செய்து கொள்வதாக தூதுச் செய்தி அனுப்பினார்கள்.
இதன் பிறகு நஜ்ஜாஷி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மிகவும் மரியாதை செய்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சார்பில் நானூரு தீனார்கள் (தங்கக் காசுகள்) மஹராகக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பிறகே உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா யைத் திருமணம் செய்தார்கள். இது சுருக்கமான விபரம்.
இந்தத் திருமணத்திற்கும் நிச்சயமாக காம உணர்வு காரணமாக இருக்க முடியாது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆரம்பக் காலத்திலேயே தம் கணவருடன் அபீஸீனியாவுக்கு தியாகப் பயணம் மேற்கொண்டவர்கள். சுமார் 15 ஆண்டுகள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அபீஸீனியாவிலேயே தங்கிவிட்டார்கள். உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பார்த்ததைத் தவிர, இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்ததே இல்லை.
இந்தப் பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில் இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் - கணவரையும் பிரிந்து விட்டவர்,ஒரு குழந்தையையும் பெற்று விட்டவர் எத்தகைய அமைப்பில் இருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியாது.
அவர்களின் நிரமும்,அவர்களின் பருமனும்,அழகும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கும் என்பதையும் தீர்மானிக்க இயலாது. காம உணர்வு தான் இதற்குக் காரணம் என்றிருந்தால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்த்து அவர்களின் அழகில் மயங்கியிருக்க வேண்டும். ஒரு பெண்ணை அறவே பார்க்காது திருமணம் செய்தால் அதற்கு காம உணர்வைக் காரணமாகச் சொல்ல முடியுமா?
20 வயது உம்மு ஹபீபாவைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வயதில் வேண்டுமானால் அவர்கள் அழகாக இருந்திருக்கலாம். அழகானவர்களைக் கூட அகோரமாக மாற்றிவிடும் அபீஸீனிய நாட்டில் 15 ஆண்டுகளைக் கழித்த ஒரு பெண்,ஒரு குழந்தையையும் பெற்றுவிட்ட பெண், கணவனால் கைவிடப்பட்டு கவலைக்கு ஆளான ஒரு பெண் - வெளியில் சென்று தானே உழைத்து உண்ணக் கூடிய ஒரு பெண் 20 வயதில் இருந்த அதே அழகுடன் இப்போதும் இருப்பார்கள் என்று எந்த அறிவாளியாவது கூறத் துணிவாரா?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்க்காமல் அவர்களுடைய கோலம் இப்போது எப்படி இருக்கும் என்பதைக் கூட அறியாமல் உம்மு ஹபிபாவின் நிர்க்கதியான நிலையைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் தான் அவரை மணந்து கொள்ளப் போவதாக நஜ்ஜாஷிக்கு தூது அனுப்புகிறார்கள். இந்தத் திருமணத்தைப் பற்றி முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹபீபாவை நேரில் சந்திக்கவில்லை. அவர்களது நிராதரவான நிலையை அறிந்தவுடனேயே அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.
நியாய உணர்வு படைத்தவர்களே! இந்தத் திருமணத்திற்கு காம உணர்வு தான் காரணம் என்று சொல்லப்படுவதை இதன் பிறகும் உங்கள் உள்ளம் ஏற்கிறதா?
25வயதில் இல்லாத காம உணர்வு மரணத்தை நெருங்கி விட்ட 59வது வயதில் தானா திடீரென்று ஏற்பட்டு விடும்? அதுவும் எப்படி இருப்பார் என்று தெரியாத ஒரு பெண்ணின் மீதா காம உணர்வு ஏற்படும்? ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட - உடலுறவுக்குரிய தகுதியை இழப்பதற்குரிய கட்டத்தை நெருங்கி விட்ட - அழகையும், இளமையையும் பிரயாணங்களிலும் கவலையிலும் முற்றுமாக இழந்து விட்ட ஒரு பெண் மீது தானா காம உணர்வு ஏற்படும்? ஒருக்காலும் ஏற்படாது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏனைய திருமணங்களுக்கு காம உணர்வு எப்படி காரணமாக இருக்கவில்லையோ அது போல் இந்தத் திருமணத்திற்கும் அது காரணமில்லை.

ஸஃபிய்யா பின்து ஹுயய் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
இனி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாக்க் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை அறிவுடையோர் உணர இயலும்.
நபிகல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபிய்யா பின்து ஹுயய் என்பவரை அடுத்தபடியாக மணந்து கொண்டார்கள்.
இவர் ஹாரூன் வம்சா வழியில் உதித்த யூதக் குடும்பத்துப் பெண்மனியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்ஷம் என்பவரின் மனைவியாக இருந்தார். (இவருடைய மற்றொரு மனைவி தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விஷமூட்டப் பட்ட ஆட்டிறைச்சியை உண்னக் கொடுத்தார்.)
இதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மனந்து கொண்டார்கள். ஸபிய்யாவும், அவரது கணவர் கினானாவும், அவருடைய தந்தை ஹுயய் என்பாரும் மதீனாவில் வசித்து வந்தனர்.
மதீனாவிலிருந்த யூதர்களும், கைபர் பகுதியில் இருந்த யூதர்களும் தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வந்தனர். செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி மக்காவின் காபிர்களுக்கு நாட்டு இரகசியங்களைக் கூறி குழப்பம் செய்து வந்தனர். எனவே கைபர் பகுதி யூதர்களுடன் போர் செய்வதற்க்கான முயற்சியில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கினார்கள்.
இதை அறிந்த ஸஃபிய்யாவும் அவரது தந்தையும் கணவரும் மதீனாவைக் காலி செய்து விட்டு கைபருக்குப் புறப்பட்டனர்.
கைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றி அடைந்தனர். யூதத் தலைவர்களில் பிரதானமானவர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கொல்லப்பட்டவர்களில் ஸபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவராவார். பலர் சிறை பிடிக்கப்பட்ட போது ஸபிய்யாவும் சிறைபிடிக்கப் பட்டார்கள்.
அன்றைய வழக்கப் படி கைதிகள் போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். திஹ்யா என்பவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தமக்கு ஒரு கைதியைத் தருமாறு கேட்டு ஸபிய்யாவை அழைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் அல்லாஹ்வின் தூதரே இந்தப் பெண் இந்த சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார். எனவே தாங்கள் இவரை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்று அவர்கள் கூறினார்கள். இதன் பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபிய்யாவை விடுதலை செய்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இது இத்திருமணத்தின் சுருக்கமான சரித்திரப் பின்னணியாகும்.
இதை ஊன்றிக் கவணிக்கும் அறிவுடைய எவரும் இத்திருமணத்திற்கு காம வெறியைக் காரணமாக கூற முன்வர மாட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அந்த அம்சங்கள் யாவும் எதிரிகளின் அடிப்படையற்ற அவதூறைத் தகர்த்து எறிகின்றன.
முதலாவது அம்சம்; நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது. இது ஹிஜ்ரி 7ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஹிஜ்ரி 7ம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது 60 ஆகும். ஐம்பது வயது வரை ஒரேயொரு மணைவியுடன் இல்லறம் நடத்திய நபியவர்களுக்கு மரணத்திற்கு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தானா காம வெறி ஏற்பட்டிருக்கும்?
இரண்டாவது அம்சம் ஸபிய்யாவின் நிலை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகிப் போனவரைத்தானா காம வெறி கொண்டவர்கள் தேர்வு செய்வார்கள்?
மூன்றாவது அம்சம் இந்தத் திருமணம் நடந்த சந்தர்ப்பம். அதாவது கைபா; என்ற அந்நிய நாட்டுடன் போரிட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி அடைந்துள்ள நேரம்! பெரும் தலைகள் எல்லாம் மண்ணில் உருண்டு கிடக்கும் நேரம்! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் எத்தனையோ கண்ணியரைக் கவர்ந்து கொண்டிருக்க முடியும். எவரும் அதைத் தடுக்க சக்தி பெற்றிருக்கவில்லை.
பொதுவாகவே அன்றைய உலகில் மன்னர்கள் வெற்றி அடையும் சமயங்களில் விரும்பிய கண்ணியரைக் கவர்ந்து கொள்வது சர்வசாதாரணமான ஒன்றாகத் தான் இருந்தது. போர் தர்மம் என்று இதற்கு நியாயமும் கூறப்பட்டு வந்தது.
இவ்வளவு சாதகமான சூழலிலும் எந்தக் கண்ணியரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். காம வெறி கொண்டவர்கள் தேர்வு செய்யும் எந்த வழியையும் அவர்கள் கைக் கொள்ளவில்லை. இந்தக் கட்டத்தில் கூட இரண்டு கணவர்களுடன் வாழ்ந்த விதவையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் இதற்குக் காம உணர்வு எப்படி காரணமாக இருக்க முடியும்?
கடைசியாக கவனிக்கப் படவேண்டிய அம்சமும் முக்கியமானதாக உள்ளது. அதாவது ஸபிய்யாவும் மற்றவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவுடன் அவர்களில் ஸபிய்யாவின் அழகில் மயங்கி மனந்து கொண்டார்கள் என்றும் கூற முடியாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபிய்யா பற்றியோ மற்றவர்கள் பற்றியோ சிந்திக்கக் கூட இல்லை.
இதனால் தான் திஹ்யா என்பவர் ஸபிய்யாவை தமக்காக எடுத்துக் கொள்கிறார். அவர் எடுத்துக் கொண்ட சமயத்தில் கூட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.
பனூ குரைலாவுக்கும், பனூ நுழைர் கூட்டத்துக்கும் தலைமை வகித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சிலா; அடையாளம் காட்டிய பிறகு தான் அவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடுதலை செய்து மணக்கிறார்கள்.
ஸபிய்யா அழகு படைத்தவராக இருந்தாலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்து கொண்டதற்கு அதுவே காரணம் அல்ல. அழகு காரணம் என்றிருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவரை மணந்திருக்கலாம்.
யூதர்களின் அரச குடும்பத்துப் பெண் என்று காரணம் கூறப்பட்ட பின்பே அவரை மணந்து கொள்ளும் முடிவுக்கே நபியவர்கள் வருகிறார்கள்.
யூதர்களின் வெறுப்புணர்வைத் தனித்துக் கொள்வதும், இரு சமூகத்தினரிடையே நல்லுறவு ஏற்பட்டதும் இத்திருமணத்தினால் விளைந்த நன்மைகளாகும்.
இது போக ஏனைய திருமணங்களுக்குரிய பொதுவான காரணம் இத்திருமணத்திற்கும் பொருந்தும்.
ஏனைய திருணங்களுக்கு எப்படி காம உணர்வு தான் காரணம் என்று கூற முடியாதோ அது போல் இத்திருமணத்திற்கும் அதைக் காரணமாக கூற முடியாது.

மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைசியாக மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்தார்கள்.
பர்ரா எனும் இயற்பெயருடைய மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹாரிஸ் என்பவரின் மகளாவார். இவர்கள் உமர் பின் அம்ர் என்பாரை முதலில் மணந்தார்கள். அவருக்குப் பின் அபூ ரஹ்ம் பின் அப்துல் உஸ்ஸா என்பாரை மணந்தார்கள். இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு அவ்விருவரும் மரணித்த பின் மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விதவையாக இருந்தார்கள்.
இவர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அறுபதாவது வயதின் கடைசியில் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்தின் போது மைமூனா அவர்களின் வயது எவ்வளவு என்பதற்கான தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் ஏற்கனவே இரண்டு கணவர்களை மணந்து பின்னர் விதவையாக இருந்தார்கள் என்பது அவர்கள் நடுத்தர வயதைக் கடந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக உள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்முல் பழ்ல் என்ற பெண்னை மணந்திருந்தார்கள். உம்முல் பழ்ல் உடைய சகோதரி தான் மைமூனா. இதன் காரணமாக அப்பாஸ் அவர்களின் பராமாரிப்பில் மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்தார்கள். அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் அவரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மணமுடித்து வைத்தனர்.
மேலும் மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தாமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தம்மை ஏற்றுக் மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டதும் தமது பெரிய தந்தையின் பொறுப்பில் அவர் இருந்ததும் இத்திருமணத்திற்கு பிரத்தியேக காரணமாகும். எனவே இத்திருமணத்திற்கும் காம வெறியைக் காரணமாகக் கூற முடியாது.
இவை தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்கள். இத்திருமணங்களில் எவையுமோ காம வெறியை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை மட்டும் அவ்வப்போது விளங்கியுள்ளோம்.

உண்மையான காரணங்கள் என்ன?
அப்படியானால் எந்த நோக்கத்தில் இவ்வளவு திருமணங்கள் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்குரிய வரம்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் ஏன் தளர்த்தப் பட வேண்டும்? என்பதை இனி காண்போம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சராசரி மனிதர்கலில் ஒருவராக இருக்கவில்லை. சாதாரண தலைவர்களில் ஒருவராகவும் இருக்க வில்லை. மாறாக அல்லாஹ்வின் திருத்தூதராக தம்மை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் இறுதித் தூதர்எனப் பிரகடனப்படுத்தினார்கள். தம்மைத் தூதர் எனப் பிரகடனம் செய்தது முதல் உலக முடிவு நாள் வரை அவர்கள் தாம் இறைத்தூதர். உலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய எல்லா மாந்தர்களுக்கும் அவர்களே வழிகாட்டியாகவும், அழகிய முன்மாதிரியாகவும் திகழ வேண்டியவர்களாக இருந்தார்கள்.
இறைத்தூதர் எனும் இவ்வுயர் பதவி மற்ற பதவிகளைப் போன்றதல்ல. இப்பதவியை அடைந்தவர் தம் வாழ்க்கையைப் பரிசுத்தமாக அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தாக வேண்டிய மகத்தான பொறுப்பு அப்பதவிக்கு உரியவருக்கு ஏற்பட்டு விடுகிறது.
அவர்களின் வாழ்க்கை பரிசுத்தமானது; அப்பழுக்கற்றது என்று உலகின் முன் நிரூபிக்கப்பட்டாக வேண்டும். கலங்கமற்ற அந்த வாழ்க்கையில் சந்தேகத்தின் சாயல் கூட படியாததாகவும் இருக்க வேண்டும். அவரது வாழ்வை எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் அதன் தூய்மை பளிச்சிட வேண்டும். அப்போது தான் இறைத்தூதர் என்று அவரை ஏற்க முடியும். ஏற்கனவே ஏற்றவர்களின் நம்பிக்கை மேலும் உறுதியடைய முடியும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையை அளந்து பார்க்கின்ற சரியான அளவு கோள் அவனது இல்லற வாழ்க்கை தான். வெளி உலகில் நல்லவனாக எவரும் நடித்திட முடியும். புனிதனாக, புன்னிய ஆத்மாவாக, திருவாளர் பரிசுத்தமாக, ஒழுக்க சீலனாக, குணக்குன்றாக, வள்ளலாக இன்னும் இது போன்ற எந்த வேடத்தையும் ஏற்று உலக மேடையில் நடித்து விடலாம். எல்லா வேடத்தையும் ஏற்றுக் கூட ஒருவன் திறம்பட நடித்து விட முடியும். மக்கள் அதை உண்மையென்று நம்பிவிடவும் முடியும். ஆனாலும் வீட்டில் அவனால் நடிக்க முடியாது. அவனது வாழ்க்கையிலும் பங்காளியாகத் திகழும் மணைவியின் முன்னே அவனது சுயரூபம் நிச்சயம் வெளிப்பட்டு விடும்.
ஒவ்வொரு பெண்ணும் தம் கணவன் பரிசுத்த ஆத்மா தானா? அல்லது பகல் வேஷக் காரண் தானா? என்பதைத் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறாள். ஆனாலும் மிகப் பொரும்பாலான மனைவியர் தம் கணவனின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாலும் அதை அம்பலப்படுத்த மாட்டார்கள். தனது வாழ்க்கை அவனுடன் பின்னிப் பினைந்துள்ளதாலும் அவனைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை நிலவுவதாலும் கணவனின் கபட நாடகத்தை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த மாட்டாள்.
ஒரே ஒரு சமயத்தில் மட்டுமே பெண்கள் தம் கணவரின் பலவீனங்களை அம்பலப்படுத்தத் துணிகின்றனர். தனக்குப் போட்டியாக தன் கணவன் மற்றொருத்தியை மணந்து கொள்ளும் போது தான் கணவனின் அந்தரங்க வாழ்க்கை மனைவியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். பரவலாக இதை நாம் காண்கிறோம். பெண்களின் இயல்பை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.
இரண்டு மனைவியரைப் பெற்று விட்டாலே ஒருவனது சாயம் வெளுத்துப் போய்விடும் என்றால் இரண்டுக்கு மேல் பல மணைவியரை அடைந்தவன் தன் நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் பல மணைவியரைப் பெற்று விட்டால் அவனது உண்மை சுயரூபம் வெளிப்பட்டே ஆகும்.
நல்லவனாக வெளி உலகுக்குத் தெரிகின்ற ஒரு மணிதன் உண்மையிலேயே நல்லவன் தானா? என்பதைச் சோதித்து அறிய அவனுக்கு இரண்டு மணைவியர் இருந்து இருவருமே அவனைப் பற்றி நற்சான்று தந்து விடுவது மிகச் சிறந்த ஆதாரமாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையையும், நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உலக மக்களுக்கு போதனை செய்தார்கள். இவையெல்லாம் உண்மையிலேயே அவர்களிடம் இருந்தனவா? என்பதை நிரூபித்துக் காட்ட அவர்களின் பலதார மனம் மிகச் சிறந்த அளவு கோளாகும்.
பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்டினான்.
பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் அவர்களின் மனைவியர் இருந்தனர். எல்லா பெண்களுக்கிடையிலும் ஏற்படக் கூடிய சக்களத்தி சன்டைகள் அவர்களுக்கிடையேயும் நடந்ததுண்டு. அவர்களுக்குள்ளே தான் அந்தச் சண்டைகள் நடந்தனவே அன்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதே இல்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைவரிடமும் சமமான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களையும் மீறி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா என்ற ஒரு மனைவி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினார்கள். இதனால் மற்ற மணைவியருக்கு ஆயிஷா மேல் பொறாமை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களின் அந்தரங்க வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததாக அவர்கள் விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு பரிசுத்த வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.
ஸைனப் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா எனும் மனைவி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பருகுவதற்காக தேன் சேகரித்துக் கொடுப்பார்கள். அதை அருந்துவதற்காக அடிக்கடி அந்த மனைவியிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று வருவார்கள். ஆயிஷாவுக்கும், ஹப்ஸாவுக்கும் இது பொறாமையாக இருந்ததுண்டு. ஆனாலும் இதன் காரணமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை பற்றி குறைவாக எதையும் அவர்கள் பேசினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அவர்களால் குறை காண முடியாதவாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
இறையச்சம் பற்றி வெளி உலகுக்குப் போதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் அந்த இறையச்சத்திற்கு செயல் வடிவம் கொடுக்க நல்லிறவில் இறைவனை வணங்க ஆரம்பித்து விடுவதைக் கண்ட பின் அவர்கள் எப்படி நபியவர்களைக் குறை கூற முடியும்?
இம்மையின் நிலையாமை பற்றி போதித்து விட்டு வீட்டுக்கு வந்தால் அதைச் செயல் படுத்தும் விதமாக பல சமயங்கள் பட்டினியோடும், பல சமயங்களில் காய்ந்த ரொட்டியுடனும் இரவு பொழுதைக் கழித்த உண்மையான வாழ்வை அவர்களால் விமர்சிக்க முடியுமா என்ன?
ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்குமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி கயிற்றின் வரிகள் அவர்களின் முதுகில் ஆழமாகப் பதிந்ததைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த வாழ்வை அவர்களால் குறை கூற முடிந்திருக்குமா?
மதீனத்து மாமன்னராக ஆன பின்பும், அவர்களின் குடிசையில் செல்வங்கள் வந்து குவிக்கப்பட்ட பின்பும் அவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் உறங்க மறுத்த கண்களுக்கு சொந்தக் காரரிடம் என்ன குறை கண்டிருப்பார்கள்?
பொறுமை, அடக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் போதனை செய்து விட்டு, தன்னை விட பலவீனமாக உள்ள மனைவியடம் கூட இந்தப் பொறுமையைக் கடைப் பிடித்து பண்பாடுகளில் சிகரமாகத் திகழ்ந்த அந்த உயர்ந்த மனிதரிடம் என்ன குறையை அவர்கள் கண்டு பிடிக்க முடியும்?
கடுஞ்சொல் கூறாத, கை நீட்டி அடிக்காத மனைவியரின் வீட்டு வேலைகளிலும் ஒத்தாசை செய்த அந்த உத்தமரிடம் குறை காண்பார்களா என்ன?
உங்களில் சிறந்தவர் யார் எனில் தம் குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடப்பவரே! நான் உங்களை விட குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடக்கிறேன் என்று கூறிய அந்த மாமனிதரை அவர் சொன்னது போலவே நடக்கக் கண்டவர்கள் அவரின் மனைவியர் தான். அதனால் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய அந்த நற்பண்புகள் பற்றி அவர்களின் மனைவியரே வெளி உலகுக்குச் சொல்ல முடிந்தது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது? என்று கேட்ட போது குர்ஆன் ஆகவே அவர்களின் குணம் இருந்தது என்று அந்த மனைவியரால் பதிலளிக்க முடிந்ததும் இதனால் தான்.
அவர் போதிக்கின்ற குர்ஆனில் கூறப்படுகின்ற எல்லாப் பண்புகளும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டன என்று அவரது மனைவியரே சான்று பகரும் அளவுக்கு சொல்லுக்கும் நடத்தைக்கும் வித்தியாசம் காட்டாதவர் அவர்.
ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் தன் கணவரைப் பற்றி இப்படிக் கூறி விடலாம். பல மனைவியரைப் பெற்றும் அவர்கள் அனைவருமே இப்படிக் கூற முடிந்தது என்றால் அவரிடம் இரட்டை வாழ்க்கை இருந்தது கிடையாது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.
எந்தப் பரீட்சையில் அனைவரும் தோற்று விடுவார்களோ அந்தப் பரீட்சை தான் நபியவர்களுக்கு பல திருமணங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி. அந்தப் பரீட்சை அவர்களின் தூய வாழ்வை நிரூபித்துக் காட்ட அவசியமாகவும் இருந்தது. அவர்களால் அதில் தேறவும் முடிந்தது.
அவர்களைத் தவிற மற்றவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையுமில்லை. அவர்களால் இதில் தேறவும் முடியாது.
ஒரு கணவன் பல மணைவியரைப் பெற்று அவர்களைச் செல்வ செழிப்பில் வைத்திருக்கும் போது வேண்டுமானால் அவனது அந்தரங்க வாழ்க்கை மனைவியரால் அம்பலப்படுத்தப் படாமல் மறைக்கப்படலாம்.
இம்மாமனிதரைக் கணவராகப் பெற்றவர்களோ வறுமையையும் சேர்த்தே பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மனைவி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிராற உண்டதில்லை என்றார்கள்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிறைய உண்ணக் கூட வழி இல்லாமல் தான் அவர்களின் மனைவியர் இருந்தார்கள். உணவுக்கே இக்கதி என்றால் ஏனைய வசதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
கட்டிய கணவரால் வேளாவேளைக்குச் சோறு போட முடியாத போதும், அவர் பல மனைவியரை மணந்து தங்கள் இல்லற சுகத்திலும் குறைவு வைத்த போதும், மற்றவர்களுக்கு இல்லாத கட்டுப் பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட போதும் இவர்களுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்ட போதும், நபியவர்களின் வாழ்க்கை விமர்சிக்கப்பட முடியாத தூரத்தில் இருந்தது.
எந்த மனிதனும் வாழ்ந்து காட்ட முடியாத பரிசுத்த வாழ்வுக்கு அவர் சொந்தக்கார்ர் என்று நிரூபிக்க நபியவர்கள் பல திருமணங்களைச் செய்து காட்ட வேண்டியிருந்தது. இது மட்டுமே காரணம் அல்ல இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்.
இறைவனது தூதர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இடையே ஏறாளமான வித்தியாசங்கள் உள்ளன. அரசியல் தலைவர்களாகட்டும்! குறிப்பிட்ட துறையில் காணப்படும் தவறுகளைக் களையெடுக்கும் இயக்கங்களின் தலைவர்கள் ஆகட்டும்! இவர்கள் மக்களுக்குக் கட்டளை இடுபவர்களாகவோ, குறிப்பிட்ட சில விஷயங்களைப் பிரச்சாரம் செய்பவர்களாகவோ மட்டும் இருப்பார்கள். அப்படி இருந்தால் போதும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள்.
அரசியல் தலைவர்கள் என்றால் அவர்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களின் உயிர் உடமை, கற்பு போன்றவற்றை பாதுகாப்பவர்களாகவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற அளவுக்குத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். (அரசியல் வாதிகள் அப்படி நடந்து கொள்வதில்லை என்பது தனி விஷயம்.)
இந்த அரசியல் தலைவரிடம் போய் எவற்றை உண்ணலாம், எவற்றை உண்ணக் கூடாது என்றோ எவற்றை விற்கலாம்? எவற்றை விற்கக் கூடாது என்றோ, எத்தகைய உறவுகளை மணக்கலாம்? எவரை மணக்கலாகாது என்றோ கேட்க முடியாது. இல்லறத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளுக்கோ, பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளுக்கோ இன்ன பிற துறைகளுக்கோ வழிகாட்டுதலைப் பெற முடியாது.
எந்தத் துறையைச் சார்ந்த தலைவர்களது நிலையும் இதுவே ஆகும். ஆனால் இறைத்தூதர்கள் எனப்படுவோரின் நிலை இவ்வாறானதன்று.
இறைத் தூதர்கள் என்போர் சிறந்த அரசியல் தலைவராகத் திகழ வேண்டும். தமது பிரஜைகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்பவராக இருக்க வேண்டும். உலகத்தில் எத்துனை துறைகள் உள்ளனவோ அத்துனை துறைகளிலும் சரியான வழி இது தவறான வழி இது என்பதை கற்றுத் தருபவராக இருக்க வேண்டும்.
பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரையிலும், உறங்கி எழுந்ததிலிருந்து மீண்டும் உறங்கும் வரையிலும் மனிதனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் வழிகாட்ட இறைத் தூதர் கடமைப்பட்டவர் ஆகின்றார். அவரது வாழ்க்கை ஒழிவு மறைவின்றி திறந்த புத்தகமாக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும். அவருடைய போதனைகள் மட்டுமின்றி அவரது நடத்தைகளும் கூட பின்பற்றப்பட்த் தக்கதாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுவதும், என்னிடமிருந்து சிறிய விஷயம் உங்களுக்குத் தெரிந்தாலும் அதைப் பிறருக்கு அறிவித்து விடுங்கள் என நபியவர்கள் கூறியிருப்பதும் இதனை நமக்கு விளக்கிடப் போதுமானதாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவை, செய்து காட்டியவை, அவர்கள் முன்னிலையில் மற்றவர் ஒரு காரியத்தைச் செய்யும் போது நபியவர்களால் அங்கீகரிக்கப் பட்டவை யாவும் யுக முடிவு நாள் வரையிலும் தோன்றக்கூடிய மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. பொதுவாகவே எல்லா இறைத்தூதர்களின் போதனைகளும், அவர்களின் முழு வாழ்க்கையும் மக்களிடம் வைக்கப்பட வேண்டும் என்றாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதிக் தூதர் என்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்கு வெளியே நடந்து கொண்ட முறைகளையும், வீட்டுக்கு வெளியே செய்த போதனைகளையும் அவர்களின் அன்புத் தோழர்கள் மிகவும் உண்ணிப்பாக்க் கவனித்து அடுத்த தலைமுறையினருக்கு அந்தச் செய்திகளை எட்டச் செய்தார்கள்.
இந்தப் பணியைச் செய்ய பல்லாயிரக் கணக்காண அவர்களின் தோழர்கள் தம் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
ஆனால் அவர்கள் வீட்டுக்குள்ளே நடத்திய வாழ்க்கையை வீட்டாரிடம் நடந்து கொண்ட முறைகளை, வீட்டுக்குள் அவர்கள் செய்த போதனையை அந்த்த் தோழர்களால் அறிய இயலாது. எந்த ஒரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கையையும் அவனது மனைவியைத் தவிர மற்றவர்களால் அறியவே முடியாது.
நபியவர்கள் வீட்டுக்குள் நடந்து கொண்ட முறை மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அவர்களின் மனைவியர் வழியாக மட்டுமே சென்றடைவது சாத்தியமாகும்.
வீட்டில் நடக்க வேண்டிய அவர்களின் உணவு உண்ணுதல், உறங்குதல் இரவு நேர வணக்கங்கள், இல்லற வாழ்க்கை போன்றவற்றைச் சமுதாயம் அறிவதற்கு அவர்களின் மனைவியரை விட்டால் வேறு வழியில்லை.
அவர்களின் வெளி உலக வாழ்க்கையை அறிவிக்க பல்லாயிரக்கணக்கான தோழர்கள் தேவைப்படும் போது அவர்களது வாழ்க்கையின் மற்றொரு பகுதியை அறிவிக்க ஒரேயொரு மணைவியால் சாத்தியப் படாது. அவர்கள் வீட்டுக்குள் செய்த போதனைகள் அத்தனையும் ஒன்று விடாமல் மனப்பாடம் செய்ய ஒன்றிரண்டு மனைவியரால் சாத்தியப்பட்டிருக்காது.
இஸ்லாமியச் சட்டங்களில் சுமார் சரிபாதி சட்டங்கள் அவர்களின் மனைவியர் வாயிலாகவே உலகுக்கு கிடைத்தன. நபித்தோழர்கள் கூட அந்த விபரங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்கு வரம்பு ஏதும் இருந்திருக்குமானால் ஏராளமான சட்டங்கள் உலகுக்குக் கிடைத்திருக்வே முடியாது.
பெண்கள் தங்களின் பிரத்தியேகமான விஷயங்களையும், மாதவிடாய் பிரசவத்தீட்டு போன்றவற்றை மட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர் வாயிலாக அறிந்தார்கள் என்பதில்லை. எப்படி உண்டார்கள்? எப்படி உறங்கினார்கள்? இரவுப் பொழுதை எப்படிக் கழித்தார்கள்? எப்படிக் குளித்தார்கள்? என்பதை அந்த மனைவியரிடம் கேட்டே ஆண்களும் கூட அறிய முடிந்தது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு சிறு பகுதியும் மக்களைச் சென்றடையாமல் இருக்கக் கூடாது. சிலர் சொல்ல மறந்து விட்டாலும் மற்ற சிலரால் உலகுக்கு அது தெரிய வேண்டும். அந்த ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை உலகம் கவணிக்க வேண்டும் என்பதும் அவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டதற்க்கான காரணமாகும்.
இறைத்தூதர் தவிர மற்றவர்களுக்கு இந்தக் காரணம் பொருந்தாது. மற்றும் சில காரணங்களையும் பார்ப்போம்.
நபியவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் இறைவனால் தூதராக அனுப்பப்பட்டவர்கள். அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் யாவும் அவர்களை இறைத்தூதராக நம்பிய அனைவராலும் அவசியம் பின்பற்றப் பட வேண்டியவைகளாக உள்ளன. இந்த உயர்வான தகுதியை அவர்களுக்கு வழங்க வேண்டுமானால் அவர்களின் வாழ்க்கை பரிசுத்தமானதாகவும், கலங்கமற்றதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
தூய்மையாக அவர்கள் வாழ்வது மட்டும் கூட போதாது. அவர்களின் தூய வாழ்க்கையில் சந்தேகத்தின் சாயல் கூட படியக் கூடாது. சீர்திருத்தவாதிகள் அனைவரிடமும் உலகம் இந்தத் தகுதியை எதிர்பார்கிறது. இது நியாயமான எதிர்பார்ப்பும் கூட. முழு உலகுக்கும் முழுமையான வழிகாட்டுதலை தரக் கூடிய நபியவர்களின் வாழ்க்கை நிச்சயம் இந்த அம்சத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
அகில உலகுக்கும் வழிகாட்டியாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒழுக்க வாழ்வில் சந்தேகம் தோன்றிவிடுமானால் அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த தூதுச் செய்தியே சந்தேகத்திற்கு உரியதாகிப் போகும்.
மிகவும் சிறந்த சீர்திருத்தவாதியாக்க் கருதப்படுபவரிடம் ஒழுக்க்க் கேடான செயல்கள் நிகழும் பேதும், அவருடைய ஒழுக்கத்தில் சந்தேகம் ஏற்படும் போதும் அவரது கருத்துக்களும் ஒதுக்கப்பட்டு வருவதைச் சாதாரணமாக நாம் கண்டு வருகிறோம்.
இந்த அடிப்படையை ஆழமாக மனதில் பதித்துக் கொண்டு நபியவர்கள் வாழ்வை நாம் அலசுவோம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்தியப் பிரச்சாரத்தை துணிவுடன் துவங்கிய போது உலகில் எந்த சீர்திருத்தவாதியும் சந்தித்திராத எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களது பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.
மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தவர்கள், குலப்பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள், மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள், ஏமாற்றுவதையும் மோசடியையுமே தொழிலாகக் கொண்டவர்கள், மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப் பட்டார்கள்.
எப்படியாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமை மிக்க கவிஞன் என்றார்கள், கை தேர்ந்த மந்திரவாதி என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். ஏசிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவரை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.
இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித் தனத்துக்கு இவை தக்க ஆதாரங்களாகும். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. மற்ற எல்லா ஆயுதங்களை விடவும் பலமான இந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக் கூடும். ஆனாலும்; கூட நபியவர்களின் பரிசுத்த வாழ்க்கை பற்றி அவர்கள் எந்தக் குறையும் கூறவில்லை. கூறவில்லை என்றால் அவர்களால் கூற முடியவில்லை. கூறினால் எதிரிகளும் கூட நம்ப மாட்டார்கள் என்ற நிலை.
இது போன்ற அவதூறுகளின் எல்லா வாசல்களையும் அல்லாஹ் முழுமையாக அடைத்து விட்டான் அதன் ஒரு பகுதியே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல மனைவியருடன் வாழ்க்கை நடத்தியது.
பொதுவாக ஒரு மனிதனின் மனைவி முதிய வயதுடையவளாக இருந்தால் - அவனிடம் ஒழுக்கம் இல்லாத போது - இளம் வயதுப் பெண்னை விரும்புவான். அல்லது மனைவி இளம் வயதுடையவளாக இருக்கும் போது முதிர் வயதுப் பெண்ணையும் விரும்பக்கூடும்.
மனைவி கருப்பாக இருக்கும் போது சிகப்பு நிற பெண்னை விரும்புவதும், மனைவி சிகப்பாக இருக்கும் போது கருப்பு நிறப் பெண்னை விரும்புவதும் கூட ஆண்களில் பலரது இயல்பாக உள்ளது.
உயரமாக இருந்தால் குட்டையானவளை விரும்புவதும், மெலிந்தவளாக இருந்தால் பருமனானவளை விரும்புவதும் கூட ஆண்களின் பலருடைய இயல்பாக உள்ளது. இந்த இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற மனோபாவம் எல்லோரிடமும் காணப்படாவிட்டாலும் பலரிடம் பரவலாக்க் காணப்படுவதை மறுக்க முடியாது.
இந்த மனோபாவம் இருந்ததனால் தான் இளம் வயது மனைவியைப் பெற்றவளுடன் முதிய வயதுடையவளை சம்பந்தப்படுத்திப் பேசும் போதும், சிகப்பு நிற மனைவியைப் பெற்றவனுடன் கருப்பு நிறப் பெண்ணச் சம்பந்தப்படுத்தி பேசும் போதும், இன்னும் பலவிதமான வதந்திகள் கிளப்பப்படும் போதும் இருக்கும், இருக்கும் என்று கூறி ஆமோதிப்பவர்களைக் காண முடிகிறது.
இப்படி ஆமோதிப்பவர்கள் இருப்பதனாலேயே இத்தகைய வதந்திகளைக் கூறவும் முடிகின்றது.
எவ்வளவு ஒழுக்கமானவன் பற்றியும் இப்படிக் கூறி விடலாம் அதை நம்புவதற்கு ஆட்களும் இருப்பார்கள்.
ஆனால் நபியவர்கள் பற்றி அன்று எதிரிகள் இது போன்று அண்ணியப் பெண்ணுடன் சம்பந்தப் படுத்திப் பேசத் துணியவில்லை. அப்படிப் பேசினாலும் எவரும் அதனை நம்பியிருக்கவும் மாட்டார்கள்.
இளம் வயதிலும், முதிய வயதிலும், உயரமாகவும், குட்;டையாகவும்,பருமனாகவும் மெலிந்தவராகவும் பல மனைவியர் இருந்ததால் அன்னியப் பெண்களை நாடக்கூடிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்பதை எதிரிகளும் உணர்ந்தார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனைவி தேவையென்றால் முறையாக உலகுக்குத் தெரியும் வகையில் அறிவித்து விட்டு திருமணம் செய்து கொள்வாரே தவிர முறை கேடாகப் பெண்களை அவர் நாட மாட்டார் என்று எதிரிகளுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.
பல மனைவியரை அடைந்ததால் செய்யப்படும் விமர்சனத்தை விட தனக்குச் சம்பந்தமில்லாத அன்னியப் பெண்களை விரும்பினார் என்ற விமர்சனம் மிகவும் கடுமையாக இருந்திருக்கும். இதனால் அவர்களின் தூதுத்துவமே சந்தேகிக்கப் பட்டிருக்கும்.
ஆண், பெண் உறவுகளில் சம்பந்தப்படுத்தி எப்படியெல்லாம் மனித உள்ளங்கள் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை வாசல்களும் அதனால் அடைக்கப்பட்டன. இறைத்தூதர் என்றும் அகில உலக வழிகாட்டி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவருக்கு இது அவசியமானதே என்பதை மறுக்க முடியாது.
இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும், இதை அனுமதிக்கலாமே என்றெல்லாம் கேட்க முடியாது. ஏனெனில் நபியவர்களின் சமுதாயத்தில் தோன்றிய எந்த சீர்திருத்தவாதியும் சுயமாக எதையும் கூற முடியாது. நபியவர்கள் சொன்னதை மாத்திரமே அவர் எடுத்துச் சொல்ல முடியும். அவருடைய வாழ்வு சந்தேகத்திற்கு உரியதாகிப் போனால் அவர் தான் ஒதுக்கப் படுவாரே தவிர அவர் எடுத்துச் சொன்ன போதனைகளோ, இறை வசனங்களோ ஒதுக்கப் படுவதில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த வாழ்வு களங்கப்படுத்தப் படாமல் இருக்க அவர்களின் பல திருமணங்கள் கவசமாக உள்ளன. இரு போன்ற நியாயமான காரணங்களினாலேயே நபியவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டார்கள்.
மாற்றார் விமர்சிப்பது போல் காமவெறி காரணம் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.
சுருங்கச் சொல்வதென்றால் நபியவர்கள் காமவெறியில் எந்தத் திருமணத்தையும் செய்ததில்லை. அது தான் காரணம் என்றிருந்தால் அவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு தோழர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.
அவர்களின் அத்தனை மனைவியரும் அவரைப் புகழ்ந்து அவரை அப்படியே பின்பற்றி நடந்திருக்க மாட்டார்கள்.
காமவெறி தான் காரணம் என்றால் காம வெறி மேலோங்கி இருக்கக் கூடிய இளமைப் பருவத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத வாழ்வை வாழ்ந்திருக்க முடியாது.
காமவெறி தான் காரணம் என்றால் உடலுறவுக்குரிய தகுதியை அறவே இழந்த பெண்களை அவர்கள் மனந்திருக்க மாட்டார்கள்.
காமவெறி தான் காரணம் என்றிருந்தால் மிகப்பெரும் அதிகாரம் படைத்த மன்னர் திருமணம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தெரியாமல் தினமும் ஒரு பெண்ணை அனுபவிக்க முடியும். பகிரங்கமாக அறிவித்துவிட்டு பல பெண்களைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
காம வெறி தான் காரணம் என்றால் காமவெறியைத் தூண்டக் கூடிய உணவு வகைகளை அவர் உண்டு பசியும் பட்டனியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவருக்குத் தான் அது சாத்தியப் படும்.
தொடர்ந்து பல நாட்கள் பட்டினி கிடந்தவருக்கு ஓரிரு பேரீச்சம் பழங்களை மட்டும் அல்லது காய்ந்த ரொட்டிகளை மட்டும், அல்லது குழைத்த மாவை மட்டும் உணவாகப் பெறக் கூடியவரிடம் என்ன காம உணர்வு இருக்கப் போகின்றது?
பல வேளைகள் உண்ண ஏதும் இருக்காதா என்று கேட்டு விட்டு வீட்டில் இல்லை எனக் கூறியதும் நோன்பு நோற்றவரிடம் என்ன காமவெறி இருக்க முடியும்?
இயல்பிலேயே காமவெறி இருந்திருந்தாலும் அவருடைய வறுமை அதை முழுமையாக அப்புறப்படுத்தியிருக்க முடியும்.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு அம்மாமனிதரின் வாழ்வை ஆராயும் பக்குவத்தை அனைவருக்கும் வழங்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes