Wednesday, September 14, 2011

என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்

அபூமுஹம்மத்
நூல்: புஹாரி 6787, அத்தியாயம்: குற்றவியல் சட்டங்கள்
ஆயிஷா (ரலி) கூறுகிறார்: 
    மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள்.
விளக்கம்:
மக்களுக்கு நீதி வழங்குவதற்காகவே ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் நீதி வழங்குதல் என்பது குதிரைக் கொம்பாகி உள்ளதை உலகில் நாம் காண்கிறோம். ஆட்சியாளர்கள் மக்களுக்கு அநீதி இழைக்காமல் இருந்தால் அதுவே போதும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நீதி அரிதாக உள்ளது. குறைந்த அளவு அநீதியிழைப்பவனே இன்றைய உலகில் நீதிமானாகக் கருதப்படும் அளவுக்கு நீதிக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதையும் காண்கிறோம். மற்றவர்கள் தவறிழைக்கும் போது எவ்வாறு அவர்களிடம் நடந்து கொள்கிறோமோ அதுபோல் தன் விஷயத்திலும் தன்னைச் சார்ந்தவர் விஷயத்திலும் நடந்து கொள்வதே நீதி எனப்படுகின்றது. வசதியும், செல்வாக்கும், அதிகாரமும் இல்லாத சாதாரண மனிதனின் குற்றங்களுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறதோ அவ்வாறே செல்வாக்கும், அதிகாரமும் செல்வமும் உள்ளவர்களிடமும் நடந்து கொள்வதே நீதி. அதில் உலகிலும் இவ்வாறு நீதி வழங்கும் போக்கை நம்மால் காண முடியவில்லை.
ஈராக் நாட்டின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்து நீதி(?) செலுத்திய ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதை இதற்குச் சிறிய உதாரணமாகக் கூறலாம். வழிபாட்டுத் தலங்களை இடிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. என் மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலத்தை இடிக்கக் கூடாது, மற்ற மதத்தவர்களின் வழிபாட்டுத் தலத்தை இடிக்கலாம் என்று இங்கே நீதி நிலை நாட்டப்படுகின்றது.
மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நாங்கள் மட்டும் எங்கள் மதத்தைச் சார்ந்து அதிகாரம் செலுத்துவோம். மற்ற மதத்தினர் தம்மதத்தைச் சார்ந்து நடக்கக் கூடாது என்பது ஆட்சியாளர்கள் அளிக்கும் நீதி ததும்புகின்ற விளக்கமாக உள்ளது.
மற்ற மதத்தவர்களைப் புண்படுத்தும் வகையில் பேசக் கூடாது என்பதன் பொருள் ‘எங்கள் மதத்தவர்களை மட்டும் புண்படுத்தக் கூடாது’ என்பதுதான் அதன் பொருள் என ஆட்சியாளர்கள் நடக்கிறார்கள். குண்டு வீசுதல், அடைக்கலம் அளித்தல், கொலை செய்தல் போன்ற குற்றங்களைத் தமது மதத்தவர்கள் செய்தால் அது ஜாமீனில் விடக்கூடிய குற்றம். மற்ற மதத்தவர்கள் செய்தால் ஜாமீனில் விட முடியாத குற்றம்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுப்பது தடாவில் போடப்படும் அளவுக்கு பெரிய குற்றம். ஆனால் மாநிலத்தின் முதல்வராக அவர் தமது வளர்ப்பு மகனுடைய அண்ணனுக்கு அடைக்கலம் கொடுக்கலாம். ஆனால் அது குற்றம் கிடையாது. இப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூறலாம். மதச்சார்பற்ற(?) சுதந்திர இந்தியாவில் மட்டுமின்றி மொத்த உலகத்தின் இன்றைய நிலையும் இதுதான்.
இந்த அக்கிரமங்களைக் கண்டு விரக்தியடைந்துள்ள மனித சமுதாயம் மாமனிதர் நபிகள் நாயகத்தின் இந்த நீதியை நினைத்துப் பார்க்கட்டும!
குரைஷிக் குலத்தவர் தம்மை மிகவும் உயர்ந்த குலத்தவராகக் கருதி வந்தனர். தமது குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடியதும் – நபிகள் நாயகம் கையை வெட்டுவார்கள் என்பதால் – கலக்கமுற்றனர். தமது குலத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமோ என்று கவலைப்பட்டனர்.
தமது குலத்துப் பெண்ணுக்கு மட்டும் சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவதற்காக உஸாமாவைப் பரிந்து பேச அனுப்பினார்கள். நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனாக இருந்த ஸைத் என்பாரின் மகனே உஸாமா. அதாவது வளர்ப்புப் பேரன் நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமானவராக உஸாமா இருந்தார். ஆயினும் வளர்ப்புப் பேரன் என்ற நெருக்கம் நபிகள் நாயகத்தை அசைத்து விடவில்லை. ‘வளர்ப்புப் பேரன் என்ன? நான் பெற்ற மகனேயானாலும் சட்;டத்தின் முன் அவரும் சமமானவர்தாம்’ என்று கூறி நீதிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்.
சுற்றம், நட்பு, செல்வம், செல்வாக்கு எதுவுமே நீதி வழங்குவதை விட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தடுக்க வில்லை. எள்ளின் முனையளவும் அவர்களைத் தடம் புரளச் செய்யவில்லை என்பதற்கு இந்த வரலாற்றுக் குறிப்பு தெளிவான சான்று.
அதிகாரத்தில் உள்ளவர்கள் மேல் – வழக்குத் தொடர்வதற்கே – தண்டிப்பதற்குக் கூட அல்ல – வழக்குத் தொடர்வதற்கே மேலே உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை. எவ்வளவு பெரிய குற்றவாளியையும் ஜனாதிபதி கருணை காட்டி விடுதலை செய்யலாம் என்ற நிலையையும் பதவியில் இருப்பவர்கள் நீதிமன்றத்தில் மற்றவர்களைப் போல் ஆஜராகாமல் இருக்கலாம் என்ற நிலையையும், முதல்வரும் மற்றக்குடிமக்களும் சமமானவர்கள் அல்லர் என்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் இது போன்ற பாரபட்சமான போக்குகளையும் இந்த மாமனிதரின் அற்புத வரலாற்றையும் மனித குலம் ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.
மற்றவர்களைத் தண்டிக்க வேண்டிய நேரத்தில் மட்டும் என் குடும்பத்தவர்கள் தவறு செய்தாலும் நான் விட மாட்டேன் என்று இன்றைய தலைவர்களும் தான் கூறுகின்றனர். அது போன்ற ஒரு கூற்றாக இது ஏன் இருக்கக் கூடாது என்று சிலர் எண்ணக் கூடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வெற்றி முழக்கமாக மட்டும் கூறவில்லை. மாறாக தம் குடும்பத்தவர்கள் சட்டத்தை மீறும் போது தாட்சண்யம்பாராமல் தண்டித்துள்ளனர். இன்னும் சொல்வதென்றால் மற்றவர்களுக்கு வழங்கிய தண்டனையைவிட அதிகமான தண்டனையைத் தம் குடும்பத்தினருக்கு வழங்கி நீதி செலுத்துவதன் சிகரத்தைத் தொட்டார்கள்.
அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத்தைக் கடமையாக்கிய போது இப்னு ஜமீல், காலித் பின் வலீத், அப்பாஸ் ஆகிய மூவரும் ஸகாத் கொடுக்க மறுத்தனர். இந்தச் செய்தி நபிகள் நாயகத்துக்குத் தெரிந்த உடன் ‘இப்னு ஜமீல் ஏழையாக இருந்தார். அல்லாஹ்வும் அவனது தூதரும் அவரைச் செல்வ நிலைக்கு உயர்த்தியதற்காக மறுக்கிறார் போலும். காலித் பின் வலீத் தமது கவசங்களையும் குதிரைகளையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தவர். எனவே (அவரிடம் ஸகாத் கேட்டதன் மூலம்) அவருக்கு அநீதி இழைக்கிறீர்கள். ஆனால் அப்பாஸ் எனது பெரிய தந்தையாவார். எனவே அவர் வழங்க வேண்டிய ஸகாத்துடன் அதுபோன்ற இன்னொரு மடங்கும் வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (நூல்: புஹாரி, அத்தியாயம்: ஸகாத்)
மூன்று நபர்கள் ஸகாத் வரியைக் கொடுக்க மறுக்கின்றனர். ஒருவர் முன்னர் அவர் செய்த தியாகத்தினால் மன்னிக்கப்படுகிறார். மற்றொருவர் கடிந்து கொள்ளப்பட்டதுடன் விடப்பட்டுள்ளார். ஆனால் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையும் நபிகள் நாயகத்தின் பாசத்திற்குரியவருமான அப்பாஸ் அவர்களுக்கோ அவர் செலுத்த வேண்டிய ஸகாத்தின் அளவுபோல் இன்னொரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டுமென இம்மாமனிதர் கட்டளையிடுகிறார்கள்.

மற்ற இருவரையும் மன்னித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்துப் பெரியவரை மட்டும் மன்னிக்கவில்லை என்பதிலிருந்து இந்த மாமனிதர் நீதியை நிலை நாட்டுவதில் யாருக்காகவும் எதற்காகவும் வளைந்து கொடுத்ததில்லை என்பதை யாரும் அறியலாம்.
இம்மாமனிதரின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இவ்வுலகில் நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை உலகம் உணரட்டும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes